வேதாரண்யம், ஏப்.24: வேதாரண்யம் தாலுகா தகட்டூர் சத்திர குளத்தின் கரையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வேதாரண்யம் தாலுகா தகட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி பஸ் நிறுத்தம் அருகே சத்திர குளம் உள்ளது. இந்த குளத்தின் அருகே வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கடைதெரு உள்ளிட்டவை உள்ளன. தகட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்டவர்கள் சத்திரகுளத்தை குளிப்பதற்கும் பல்வேறு பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வந்தனர். இந்த குளத்தின் கரையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகள் நீண்ட நாட்களாக அள்ளாமல் அப்படியே கிடப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.