கூடுவாஞ்சேரி, ஏப். 24: நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் தத்தெடுத்தனர். இதைதொடாந்து, பூமி தினத்தை முன்னிட்டு சுகாதார நிலைய வளாகத்தை தூய்மைபடுத்தி, மரக்கன்று நடும் பணி தீவிரமாக நடக்கிறது.
கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையோரத்தில் மேம்படுத்தப்பட்ட நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு 30 படுக்கை அறை, உள்நோயாளிகள் பகுதி, வெளி நோயாளிகள் பகுதி, ஆய்வு கூடம், பிரசவ வார்டு, அறுவை சிகிச்சை வார்டு, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை வார்டு, ரத்த சேமிப்பு நிலையம், ஸ்கேன், எக்ஸ்ரே, ஈசிஜி, பெண்கள் மார்பக புற்றுநோய் பகுதி, காசநோய் பகுதி, பல் மருத்துவம் மற்றும் சித்த மருத்துவம் உள்பட பல்வேறு வசதிகள் உள்ளன.நந்திவரம், கூடுவாஞ்சேரி, வல்லாஞ்சேரி, தைலாவரம், வள்ளலார்நகர், மாடம்பாக்கம், ஆதனூர், ஊரப்பாக்கம், ஐயஞ்சேரி, கிளாம்பாக்கம், காரணைப்புதுச்சேரி, காட்டூர், அருங்கால், கீரப்பாக்கம், முருகமங்கலம், பெருமாட்டுநல்லூர், கன்னிவாக்கம், தர்காஸ், அண்ணாநகர், பாண்டூர், காயரம்பேடு, மூலக்கழனி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் பயனடைகின்றனர்.