மயிலாடுதுறை ஏப்.23: அதிக கூட்டத்தை பயன்படுத்தி சிறப்பு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் பரிதவித்துள்ளனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து சீர்காழிக்கு செல்ல பேருந்து கட்டணம் ரூ.13ஆகும். ஏதாவது விசேஷ நாட்கள் என்றால் அரசு சிறப்பு பேருந்தை இயக்கும். அந்த நேரத்தில் விரைவு போக்குவரத்துக் கட்டணமான ரூ.20வை சாதாரண பேருந்திலும் வசூல் செய்வார்கள். இது எங்காவது விழா நடக்கும் வேளையில் விழாவிற்கு செல்லும் பயணிகள் நலன்கருதி இந்த சிறப்பு ஏற்பாட்டை செய்வது வாடிக்கை. நேற்று எந்த விசேஷமும் இல்லை. ஆனால் திடீரென மயிலாடுதுறையிலிருந்து சீர்காழி வரை செல்லும் அரசு பேருந்தில் டிக்கெட் ரூ.20 என்று வசூல் செய்துள்ளனர். மயிலாடுதுறையில் நேற்று 1.30 மணிக்கு பேருந்தில் ஏறிய பயணி ஒருவர் 3 கி.மீ தூரம் வரை சென்ற பிறகு டிக்கெட் எடுக்கும்போது ரூ.13ஐ கொடுத்துள்ளார். ஆனால் அதற்கு பேருந்து நடத்துனர், இது சிறப்பு பேருந்து ரூ.20 கொடுங்கள் என்று கேட்டுள்ளார். இது சிறப்பு பேருந்து என்றோ இதில் கட்டணம் ரூ.20 என்று போர்டில் எழுதியிருந்தாலோ அல்லது அறிவித்திருந்தாலோ நாங்கள் ஏறியிருக்கமாட்டோம் என்று கேட்டதற்கு வேண்டுமென்றால் இங்கேயே இறங்கிக்கொள்ளுங்கள் என்று பேருந்தை நிறுத்த நடத்துனர் விசில் அடித்துள்ளார்.