மண்ணச்சநல்லூர், ஏப். 10: உத்தமர்கோயிலில் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பேன் என்று சமயபுரம் பகுதியில் நேற்று பிரசாரம் மேற்கொண்ட பெரம்பலூர் திமுக கூட்டணி ஐஜேகே கட்சி வேட்பாளர் பாரிவேந்தர்
உறுதி அளித்தார். பெரம்பலூர் மக்களவை தொகுதியில் வேட்பாளராக திமுக கூட்டணியில் போட்டியிடும் ஐஜேகே நிறுவனத்தலைவர் பாரிவேந்தர் நேற்று பிச்சாண்டார்கோவில், கூத்தூர், பனமங்கலம், வெங்கங்குடி, சமயபுரம், சிறுகனூர், திருப்பட்டூர், எதுமலை, இருங்களூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளிலும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தில் பொதுமக்களிடையே வேட்பாளர் பாரிவேந்தர் பேசியதாவது: இந்தியாவின் அடுத்த பிரதமராக ராகுல்தான் வருவார் என்று 2 மாதங்களுக்கு முன்பே திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். அது நிச்சயம் பலிக்கும். அதே போல் தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்கும் நேரம் நெருங்கி விட்டது. நான் வெளியூர் ஆள் கிடையாது. மண்ணச்சநல்லூர் பகுதிக்கு நன்கு அறிமுகமான நபர்தான். இப்பகுதியில் மருத்துவ சேவையும், கல்விச் சேவையும் அளித்து வருகிறேன். ஒரு முறை எனக்கு வாய்ப்பு கொடுங்கள். முற்றிலும் வித்தியாசமான மக்கள் பிரதிநிதியாக உங்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறேன். மண்ணச்சநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகை உள்ளிட்ட மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.