திருப்போரூர், மார்ச் 22: காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக தற்போதைய எம்பியான மரகதம் குமரவேல், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் இருவரும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகின்றனர். ஆனால், கட்சியின் சீனியர்களையும், 1991 முதல் எம்எல்ஏவாக இருந்தவர்களையும் இதுவரை சந்தித்து ஆதரவு கேட்காதது, அவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்போரூர் தொகுதியில் கடந்த 1991 முதல் 1996ம் ஆண்டு வரை எம்எல்ஏவாக ம.தனபால் இருந்தார். பின்னர் மாவட்டக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்தார். 2006ம் ஆண்டு மீண்டும் திருப்போரூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். சமீபத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு சீட் கேட்டு மனு செய்து நம்பிக்கையுடன் காத்திருந்தார். ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. ஆனாலும், யாருக்கு சீட் கிடைத்தாலும் வேலை செய்ய தயாராக இருந்தாலும், அவரை யாரும் இதுவரை எட்டிக்கூட பார்க்கவில்லை. கடந்த 2001ம் ஆண்டு திருப்போரூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் கணிதா சம்பத். பின்னர் இவர் 2011ல் மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்தார். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராகவும் பதவி வகித்தார். கடந்த 2011ம் முதல் 2016ம் ஆண்டு வரை திருப்போரூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் தண்டரை மனோகரன். இவர் கிளைக்கழக செயலாளர், ஒன்றிய கவுன்சிலர், ஒன்றிய செயலாளர் பதவிகளில் இருந்தவர்.