திருவாரூர், மார்ச் 20: தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில் திருவாரூர் அருங்காட்சியகம் இருந்து வருகிறது. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் மேற்கு புறத்தில் அரசு அருங்காட்சியமானது இயங்கி வருகிறது. இங்கு பண்டைய கால தமிழர்கள் பயன்படுத்திய நரம்புகளான இசைக்கருவிகள் மற்றும் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கருங்கல்லால் ஆன கைக்கோடரி உட்பட பல்வேறு பொருட்கள் மற்றும் பஞ்சமுக வாத்தியம் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள், தாவரங்கள், விலங்குகள் போன்றவை மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்காக பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இதை தவிர திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் உட்பட பல்வேறு ஊர்களில் பூமிக்கடியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 9, 10, 11 மற்றும் 12ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த நடராஜர், பைரவர், தட்சிணாமூர்த்தி, அய்யனார், ஸ்ரீதேவி, சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, கணேசர் உட்பட பல்வேறு ஐம்பொன் சிலைகளும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர இந்தியாவின் நாணயங்கள் மற்றும் தபால்தலைகள் மட்டுமின்றி பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, சீனா மற்றும் அரபு நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தபால் தலைகள், நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் போன்றவையும் வைக்கப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி இங்கு பிரசித்தி பெற்ற புத்தர் சிலையும் ஒன்றும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையானது கிபி 10 மற்றும் 11ம் நூற்றாண்டை சேர்ந்தது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சிலையானது திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவிற்கு உட்பட்ட கண்டிரமாணிக்கம் என்ற இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.