கோபி, மார்ச் 14: கோபி நகராட்சி பகுதியில் உள்ள 30 வார்டுகளிலும் நாள்தோறும் சேகரிக்கப்படும் சுமார் 30 டன் குப்பையை நாய்க்கன்காட்டில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி வந்தனர். இந்நிலையில் குப்பை கிடங்கு நிரம்பி 40 அடி உயரத்திற்கு மலை போல் குவிந்ததை தொடர்ந்து அவ்வப்போது நகராட்சி நிர்வாகத்தினர் தீ வைத்து எரித்து வந்தனர். இந்நிலையில் குப்பை கிடங்கில் தீவைப்பதால் கடுமையான சுகாதார கேடு ஏற்பட்டதுடன், நாய்க்கன்காடு, கரட்டூர், டி.ஆர்.நகர், பார்வதிநகர், மேட்டுவலுவு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் கடந்த சில ஆண்டுகாளக போராட்டம் நடத்தி வந்தனர். இருப்பினும் குப்பை கிடங்கை மாற்றம் செய்யாத நிலையில் கடந்த மாதம் குப்பை கிடங்கு பூட்டப்பட்டது. இதனால் நகர் பகுதியில் தேங்கும் குப்பையை குடியிருப்பு பகுதியிலேயே கொட்டி வைத்துள்ள நகராட்சி நிர்வாகம் நாள்தோறும் குப்பையை தீவைத்து எரித்து வருகின்றனர்.