பவானி அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து

 

பவானி, மே 3: பவானி அருகே காலிங்கராயன்பாளையத்தில் சென்டர் மீடியனில் மோதி அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள லட்சுமி நகரில் இருந்து ஊராட்சிகோட்டையில் உள்ள டிப்போ நோக்கி அரசுப் பேருந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்று கொண்டிருந்தது. பேருந்தை குருவரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த சிவசாமி (40) என்பவர் ஓட்டி வந்துள்ளார். கண்டக்டராக எல்லீஸ்பேட்டையைச் சேர்ந்த ராஜ்குமார் (58) என்பவர் இருந்துள்ளார்.

இந்த பேருந்து, காளிங்கராயன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில், சாலையின் நடுவில் இருந்த சென்டர் மீடியனில் மோதி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில், டிரைவர் சிவசாமி, கண்டக்டர் ராஜ்குமார் ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதனையடுத்து, காயமடைந்த இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தால், சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு போலீசார் கிரேன் மூலம் பேருந்தை மீட்டனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

The post பவானி அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Related Stories: