தேனி, மார்ச் 12: நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளதையடுத்து தேனி கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பல்லவிபல்தேவ் தலைமையில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் தேர்தல் பொறுப்பு அலுவலர்கள், பறக்கும்படை கண்காணிப்புக் குழு மற்றும் வீடியோ கண்காணிப்பு அலுவார்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலெக்டர் பல்லவிபல்தேவ் பேசுகையில், தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் ஏப்.18ம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளதையடுத்து, 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து வேட்புமனுக்கள் பெறப்படும். 27ம் தேதி வேட்புமனு பரிசீலனையும், 28ம்தேதி வேட்புமனுக்கள் திரும்ப பெறுதலுக்கான வாய்ப்பும் அளிக்கப்பட உள்ளது. இதனையடுத்து, இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுவதையடுத்து, வருகிற ஏப்.18ம் தேதி வாக்குப்பதிவும், மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கையும்ட நடக்க உள்ளது. தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் பொதுமக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலுமின்றி நடத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.