ஊட்டி, மார்ச் 7: ஊட்டியில் உள்ள புனித மேரிஸ் ஆலயத்தில் சிறப்பு திருப்பலியுடன் கிறிஸ்துவர்களின் தவக்கால நிகழ்ச்சிகள் துவங்கியது. ஆண்டு தோறும் மார்ச் மாத்தில் இருந்து 40 நாட்கள் தவக்காலமாக கிறிஸ்துவர்கள் அனுசரிப்பது வழக்கம். இந்நிலையில், நேற்று முதல் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவங்கியது. சாம்பல் புதன் அன்றிலிருந்து புனித வெள்ளி வரை ஏசுவின் பாடுகளை உணர்த்தும் 40 நாள் தவக்காலம் துவங்கியது. ஊட்டி செயின்ட் மேரிஸ் ஆலயத்தில் பங்குத்தந்தை வின்சென்ட், குருக்கள் அடைக்கலம், ஜோசப் சந்தோஷ் இணைந்து தவக்கால துவக்க திருப்பலியை நிறைவேற்றினர். கடந்த ஆண்டு காய்ந்த குருத்தோலைகளை எரித்து சாம்பலாக்கி அந்த சாம்பலை மந்திரித்து பக்தர்களின் நெற்றியில் பூசி தவக்காலத்தை துவக்கி வைத்தனர்.