நெய்வேலி, மார்ச் 1: நெய்வேலியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி நகரப்பகுதிகளில் சுவர் ஓவியம் வரைய அனுமதி அளிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் தடையை தகர்க்கும் என்ற எதிர்பார்ப்பில் ஓவியக் கலைஞர்கள் காத்திருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் பல்வேறு தரப்பினருக்கும் மறைமுகமாக வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக சுவர் ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் மார்ச் முதல் வாரத்தில் 17வது மக்களவைக்கான தேர்தல் தேதி வெளியாக உள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் பதவி ஏற்பு விழா நடைபெறும் மே மாதம் வரை தேர்தல் பணிகள் களைகட்டும்.