காரைக்கால், பிப்.15: மக்களுக்கு எதிராக செயல்படும் புதுச்சேரி ஆளுநரை, புதுச்சேரியை விட்டு வெளியே போக வலியுறுத்தி, காரைக்காலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, மாதா கோவில் வீதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நாஜிம் தலைமை வகித்தார். திமுக சார்பில், அமுதா ஆறுமுகம், சங்கர், ரிப்பாஷ், வீரதாசன், ஆனந்தராஜ், காங்கிரஸ் சார்பில், மாவட்ட தலைவர் பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள் அரசன், சந்திரமோகன் உள்ளிட்ட பலரும், திமுக சார்பில் ஆனந்தராஜ், ரிபாஷ் உள்ளிட்ட பலரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வின்சென்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, காரைக்கால் டாக்கர் அம்பேத்கர் வீதி, மாதாகோவில் சந்திப்பில் அனைவரும் சாலை மறியல் செய்ய முயற்சித்தபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், அனைவரும் அதே சாலையில் சுமார் ஒரு மணிநேரம் அமர்ந்து, ஆளுநருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.