திருவள்ளூர், பிப். 15: பெரும்புதூர் அருகே நடந்த திமுக பிரமுகர் பிள்ளைப்பாக்கம் ரமேஷ் கொலை வழக்கில் மேலும் 5 பேர் நேற்று திருவள்ளூர் கோர்ட்டில் சரணடைந்தனர்.ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் பள்ளத் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (48). திமுக செயலாளர். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவரது மனைவி மாரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன், பிள்ளைப்பாக்கம் திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் ரமேஷ் கலந்துகொண்டார்.பின்னர், ஸ்ரீபெரும்புதூரில் நடந்த ஊராட்சி செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்திலும் கலந்துகொண்டார். அங்கு கூட்டம் முடிந்தவுடன் ரமேஷ், ஸ்ரீபெரும்புதூர் - குன்றத்தூர் சாலையில் கட்சிப்பட்டு பகுதியில் உள்ள அவரது அலுவலகத்துக்கு சென்றார். அப்போது ஆட்டோ, பைக்குகளில் வந்த 10 பேர் கும்பல், அலுவலகத்தில் இருந்த ரமேஷை சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பியது. புகாரின்படி, பெரும்புதூர் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தார். விசாரணையில், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியை சேர்ந்த குல்லா (எ) விஸ்வநாதனும், அவரது கூட்டாளிகளும் ரமேஷை கொலை செய்தது தெரிந்தது.