தேனி, பிப். 14: தேனி நாடார் உறவின்முறையின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் இன்று முதல் 4 நாட்கள் நடைபெறுகிறது. இதில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதுகுறித்து உறவின்முறை பொதுச்செயலாளர் ராஜமோகன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தொடங்கி 100 ஆண்டுகளாகிறது. இந்த உறவின்முறையின் கீழ் 12 கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. எனவே, உறவின்முறை மற்றும் கல்விநிறுவனங்களில் நூற்றாண்டு விழா இன்று(14ம்தேதி) முதல் பிப்.17 ம்தேதி வரை பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது.
இன்று(14ம்தேதி) தேனி நகர் பெரியகுளம் ரோட்டில் உள்ள உறவின்முறை தலைமை அலுவலகத்தின் கட்டிட முகப்புத் தோற்றம் திறக்கப்பட உள்ளது. இதேபோல தேனி நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா நுழைவுவாயில் திறக்கப்பட உள்ளது.
மாலையில் இசைத் திருவிழா நடக்க உள்ளது. நாளை (15ம்தேதி) சாலமன் பாப்பையாவை நடுவராகக் கொண்டு மாணவர்களின் முன்னேற்றத்தில் பெரிதும் துணை வீட்டுச்சூழலே, பள்ளிச்சூழலே எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடத்தப்பட உள்ளது. 16ம்தேதி நாடார் சரசுவதி துவக்கப்பள்ளியில் புதிய கேண்டீன் திறப்பு விழா நடக்க உள்ளது. வருகிற 17ம்தேதி நடக்கும் விழாவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழ்பண்பாட்டுத் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டு நாடார் சரசுவதி துவக்கப்பள்ளியில் கடடப்பட்டுள்ள காமராஜர் கல்வி வளாகத்தையும், காமராஜர் கலையரங்கத்தையும் திறந்து வைப்பதோடு, நூற்றாண்டு விழா மலரையும் வெளியிடுகின்றனர் என்று கூறினார். பேட்டியின் போது உறவின்முறை தலைவர் முருகன், பொருளாளர் ஜவஹர், உபதலைவர் பாலகிருஷ்ணன் உடனிருந்தனர்.