ஊட்டி, பிப். 12: ஊட்டி அருகேயுள்ள மசினகுடி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலைம் உள்ளது. சுற்று வட்டார கிராம மக்கள் அனைவரும் அவசர தேவைகளுக்கு இங்குதான் செல்ல வேண்டும். இந்நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை அன்று ஒரு சிறுவன் சைக்கிளில் இருந்து விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. அவனை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்குள்ள செவிலியர்கள் மருத்துவரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு வரவில்லை. மாறாக தொலைபேசியிலேயே ஊசி போடும்படி செவிலியர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை அறிந்துக் கொண்ட சிறுவனின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட டாக்டரின் வீட்டிற்கு சென்று அவரை மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொணடனர். ஆனால், அதற்கு வெகு நேரம் மறுப்பு தெரிவித்த அவர், சுமார் ஒரு மணி நேரம் கழித்து வந்து சிறுவனை பரிசோதனை செய்துள்ளார். மேலும், உடனடியாக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லவும் பெற்றோர்களிடத்தில் தெரிவித்தார். இவர், முன்னதாக காயம் அடைந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அலட்சியமாக இருந்த சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.