காரைக்குடி, ஜன. 11: காரைக்குடி 21வது வார்டில் தொட்டிக்கு வெளியே கொட்டப்படும் குப்பைகால் கடும் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். காரைக்குடி பகுதியில் உள்ள 36 வார்டுகளில் குப்பை சேகரிக்கும் பணி நகராட்சி மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடு, வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள டம்பர் பிளேசர் பின்களில் கொட்டி செல்வார்கள். அதனை நகராட்சி வாகனங்கள் மூலம் ஒவ்வொரு பகுதியிலும் சேகரித்து தேவகோட்டை ரஸ்தா பகுதியில் உள்ள குப்பைகிடங்கில் கொட்டப்படுகிறது. இதன்படி 21வது வார்டுக்கு உட்பட்ட அரு.அ.வீதி மற்றும் க.அள.ராம வீதி சந்திக்கும் பகுதியில் நகராட்சி சார்பில் டம்பர் பிளேசர் பின் வைக்கப்பட்டுள்ளது.இதில் சுற்றுப்புற பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை பணியாளர்கள் கொட்டி வருகின்றனர். தவிர தொட்டியை சுற்றியும் குப்பைகளை கொட்டுகின்றனர். இக்குப்பைகள் மறுநாள் காலை 6 மணிக்கு மேல் நகராட்சி வாகனத்தில் வந்து எடுத்து செல்கின்றனர். அதுவரை சுற்றி உள்ள குடியிருப்பு பகுதி மக்கள் கடும் துர்நாற்றத்துடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது. தவிர சாலையை மறித்து குப்பைகள் குவிந்து கிடப்பதால் அச்சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. குப்பைகளில் உள்ள கழிவுகளை சாப்பிட மாடு, நாய்கள் முகாமிட்டுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுடுகிறது.