கலெக்டருக்கு மனு பணி மாறுதல் வரையறையை தளர்த்தகோரி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 2வது நாளாக ஆர்ப்பாட்டம்

தஞ்சை,டிச. 20: பணி மாறுதல் வரையறையை தளர்த்தகோரி தஞ்சையில் 2வது நாளாக கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கமலேஷ் சந்திரா தலைமையிலான குழு அறிக்கையின் பரிந்துரைகளை முழுமையாக 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும். அனைத்து பணி நிறைவு பலன்களும் 2016ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் பணிநிறைவு பெற்ற அனைத்து கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கும் கிடைக்கும் விதமாக அமல்படுத்த வேண்டும். நிலுவைத்தொகை கணக்கீட்டில் ஏற்கனவே இருந்த குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும். பணிக்கொடை உச்சவரம்பை ரூ.1.50 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக மாற்றியமைக்க வேண்டும். பணி மாறுதல் வரையறையை தளர்த்த வேண்டும். ஊதியக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட மூன்று வகையிலான விருப்பு ஓய்வு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

இதைதொடர்ந்து நேற்று முன்தினம் முதல் நாளாக தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 2வது நாளாக நேற்று தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோட்ட தலைவர் ஜானகிராமன் தலைமை வகித்தார். செயலாளர் கருப்புசாமி, பொருளாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர். பாபநாசம் தலைமை அஞ்சலகம் முன் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம்  சார்பில் 2வது நாளாக ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் குடியரசன், கவுரவ தலைவர்  மோகன், செயலாளர் முத்தமிழ்ச்செல்வன், பொருளாளர் கருப்பையன் உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர். குடந்தையில் மனித சங்கிலி போராட்டம் கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன் கிராமிய அஞ்சலக ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. கோட்ட தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, மாரிமுத்து  தலைமை வகித்தனர். மாநில பொருளாளர் சுவாமிநாதன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். இதில் கும்பகோணம் அஞ்சலக கோட்டத்துக்கு உட்பட்ட குத்தாலம், குடவாசல், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் வட்டங்களில் உள்ள 153 கிளை தபால் நிலையங்களை சேர்ந்த 350 ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனால் அஞ்சலக சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: