வெயிலால் விளைச்சல் பாதிப்பு: தஞ்சாவூரில் பீன்ஸ் கிலோ ₹140க்கு விற்பனை

தஞ்சாவூர், ஏப்.27:வெயிலால் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டு தஞ்சாவூருக்கு பீன்ஸ் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்து 1 கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆரோக்கியமான வாழ்விற்கு நமது உணவு பழக்க வழக்கங்கள் இன்றியமையாததாக இருக்கிறது. அவற்றில் காய்கறிகள் தான் முக்கிய இடம் வகிக்கிறது. காய்கறிகளில் உள்ள சத்துக்கள் உடலில் பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்ககூடியது. ஒவ்வொரு காய்கறிகளும் ஒவ்வொரு நன்மையை கொடுக்கிறது. அவற்றில் பீன்ஸில் உள்ள புர சத்து உடலை பராமரிப்பதிலும், உடலில் ஏற்படுகிற பல்வேறு பிரச்னைகளை சரி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.பீன்ஸில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும் அதனை குழந்தைகள், சிறுவர்கள் யாரும் விரும்பி சாப்பிடுவதில்லை.

பீன்ஸ் நன்மை குறித்து தெரிந்தவர்கள் மட்டும் பீன்ஸ் மூலம் பல்வேறு வகையான உணவு பொருட்களை தயாரித்து சாப்பிட்டு வருகின்றனர். தஞ்சாவூருக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அதே போல் இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. தஞ்சாவூரில் கடந்த மாதம் பீன்ஸ் விலை குறைந்து காணப்பட்டது. தற்பொது கொளுத்தி வரும் வெயில் காரணமாக பீன்ஸ் விளைச்சல் பாதிக்கப்பட்டது. ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பீன்ஸ் வரத்தும் குறைந்துள்ளது. தஞ்சாவூரில் கடந்த மாத இறுதியில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.30க்கு விற்பனையானது. வரத்து குறைய தொடங்கியதில் இருந்து அதன் விலை அதிகரித்து வந்தது. நேற்று பீன்ஸ் 1 கிலோ ரூ.140க்கு விற்பனையானது.

அதே போல் மற்ற காய்கறி களும் கடந்த வாரத்தை காட்டிலும் ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகரித்துள்ளது. தக்காளி வழக்கமான அளவு வந்து கொண்டிருப்பதால் 1 கிலோ தக்காளி ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையாகிறது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், தஞ்சாவூருக்கு ஒசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பீன்ஸ் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பீன்ஸ் விளையும் பகுதிகளில் மழை இல்லாததாலும், வெயில் கொளுத்தி வருவதாலும் பீன்ஸ் பூக்கள் உதிர்ந்து விடுகிறது. இதனால் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூருக்கு விற்பனைக்காக பீன்ஸ் 150 மூட்டைகள் வரை வரும்.

ஆனால் வரத்து குறைவால் 50 முதல் 60 மூட்டைகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் விலை அதிகரித்துள்ளது. அதே போல் மார்க்கெட்டில் பீன்ஸ் மூட்டை வந்து இறங்கிய உடனே போட்டி போட்டு வியாபாரிகள் வாங்கி சென்று விடுகின்றனர். அதுவும் குறைந்த அளவிலே கிடைக்கும் பீன்சும் குறிப்பிட்ட நேரத்திற்கு விற்று தீர்ந்து விடுகிறது. சில்லறை விற்பனை கடைகளில் குறைவான அளவில் இருக்கின்றன. மழை வெயில் குறைந்து மழை தொடங்கினால் மட்டுமே பீன்ஸ் விலை குறையும். இனி வரும் வாரங்களில் விளைச்சல் பாதித்தால் பீன்ஸ் விலை ரூ.200 வரை விற்பனையாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post வெயிலால் விளைச்சல் பாதிப்பு: தஞ்சாவூரில் பீன்ஸ் கிலோ ₹140க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: