தஞ்சாவூர் ராமநாதன் ரவுண்டானா அருகே சேதமான பாதாள சாக்கடை மூடி சீரமைப்பு

 

தஞ்சாவூர், ஏப்.26: தஞ்சாவூர் ராமநாதன் ரவுண்டானா அருகே பாதாள சாக்கடை மூடியை தினகரன் செய்தி எதிரொலியால் மாநகராட்சி ஊழியர்கள் சீரமைத்தனர். தஞ்சாவூர் மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கரந்தை, வடக்கு வாசல், பள்ளி அக்ரஹாரம், மாரிக்குளம் உள்ளிட்ட இடங்களில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து கழிவுநீர் ராட்சத குழாய்கள் மூலம் சமுத்திரம் ஏரியில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அங்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு தண்ணீர் பாசனத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தஞ்சாவூர் மாநகரில் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆள் நுழை குழிகளும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆள் நுழை குழிகள் மீது கான்கிரீட் மூடியும் போடப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் இந்த குழிகள் வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது.

சில இடங்களில் அந்த குழிகள் மீது போடப்பட்டுள்ள மூடி உடைந்து விடுவதால் கழிவுநீர் வெளியேறி சாலைகளில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இந்த நிலையில் தஞ்சாவூர் ராமநாதன் ரவுண்டானா அருகே பாதாள சாக்கடை மூடி சேதமடைந்து உள்ளது. வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விடாமல் இருக்க சமூக ஆர்வலர்கள் அந்த பாதாள சாக்கடை மூடியை சரி செய்ய வேண்டுமென தினகரனில் கடந்த 24ம் தேதி செய்தி வெளியானது.

அதன் எதிரொலியாக தஞ்சாவூர் மாநகராட்சி ஊழியர்கள் நேற்றுமுன்தினம் பாதாள சாக்கடை மூடியை சரி செய்தனர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட தினகரனுக்கும், சரி செய்த தஞ்சாவூர் மாநகராட்சி ஊழியர்களுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

The post தஞ்சாவூர் ராமநாதன் ரவுண்டானா அருகே சேதமான பாதாள சாக்கடை மூடி சீரமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: