நாகை,டிச.12: புயலினால் பாதிக்கப்பட்ட மா மரங்களை மறு சீரமைப்பதற்கான வழிமுறைகளை நாகை கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ் நாட்டில் புயலின் காரணமாக நாகை, தஞ்சை, கருர், புதுக்கோட்டை, திருவாரூர், சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல், தேனி போன்ற மாவட்டங்களில் மா மரங்கள் அதிக அளவில் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மா மரங்களை மறு சீரமைப்பதன் மூலம் மீண்டும் புத்துயிர் கொடுக்க முடியும். 5 வயது வரை உள்ள மரங்கள் காற்றினால் வேர் பகுதி சேதமடையாமல், மரங்கள் சாய்ந்திருந்தால் நேராக நிமிர்த்தி மண் அணைக்க வேண்டும். பூச்சி மற்றும் நோய் தாக்கப்பட்ட கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தி, பின்பு வெட்டு பாகத்தில் காப்பர் ஆக்சி குளோரைடு பசையை 300 கிராம் என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து தடவ வேண்டும். ஒரு மரத்திற்கு நன்கு மக்கிய தொழு உரம் (10 கிலோ) வேப்பம் புண்ணாக்கு (1 கிலோ), மண்புழு உரம் (2 கிலோ) அல்லது அசோஸ்பைரில்லம் (100 கிராம்), பாஸ்போ பாக்டிரியா போன்ற உயிர் உரங்கள் (100 கிராம்) இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.காய்ப்பு பருவத்தில் உள்ள மரங்கள் வேர் பகுதி சேதமடையாமல் மரங்கள் சாய்ந்து இருந்தால் கயிறு கட்டி அல்லது இயந்திரத்தின் மூலம் மரத்தை நிமிர்த்தி மண் அணைக்க வேண்டும். சாய்ந்த மரங்களில் 60 முதல் 80 விழுக்காடு கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும். வெட்டப்பட்ட இடத்தில் ஆக்சி குளோரைடு பசையை 300 கிராம் மருந்து ஒரு லிட்டர் நீரில் தடவ வேண்டும்.