கடலூர், அக். 17: ஊதிய மாற்றம், அரசு பணியாளர்களுக்கு வழங்குவதை போல அகவிலைப்படி உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் (15ம் தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் நடத்தி வருகிறது. ஏற்கனவே அறிவித்திருந்ததன்படி நேற்று 2வது நாளாக மாவட்ட தலைநகரங்களிலும், வட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய மூன்று இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கடலூரில் பழைய மாவட்ட ஆட்சியரகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் முத்துபாபு தலைமை தாங்கினார். அரசு பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் சரவணன் சிறப்புரையாற்றினார்.