திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலின் ஆழித்தேருக்கு ரூ.40 லட்சத்தில் கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி

திருவாரூர், அக்.12: திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலின் ஆழித்தேருக்கு ரூ.40 லட்சத்தில் கண்ணாடி கூண்டு அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.  திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலானது சைவ சமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும் , சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும்  இருந்து வருகிறது. மேலும் பூங்கோயில் என்று அழைக்கப்பட்டு வரும் இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் இருந்து வருகின்றனர். கோயில் 5 வேலி, குளம் 5 வேலி, ஓடை 5 வேலி நிலபரப்பில் அமையப்பெற்றது என்ற சிறப்பினை கொண்ட இக்கோயிலுக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய 2வது தேர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

 இந்நிலையில்  சாதாரணமாக 30 அடி அகலமும் , 30 அடி உயரமும், 220 டன் எடையும்  கொண்ட இந்த  ஆழித்தேரானது தேரோட்டத்தின் போது மூங்கில் மற்றும் பனஞ்சப்பைகள்  கொண்டு மொத்தம்  96 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்டு மொத்தம் 300 டன் எடையுடன் நகரின் 4 வீதிகளிலும் ஆடியசைந்து வருவது கண்கொள்ளா காட்சியாகும்.  இந்த தேரோட்டத்திற்காக  ஆழித்தேரின் மேற்கூரையானது பிரிக்கப்பட்டு பின்னர் மூடப்படும் நிலையில் மற்ற காலங்களில் தேரினையும், தேரில் உள்ள அழகிய வேலைபாடுகள் கொண்ட மரசிற்பங்களையும் பொதுமக்களும், பக்தர்களும் குறிப்பாக வெளியூர் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகளும் ஆழிதேரை முழுமையாக பார்க்க முடியாத நிலை இருந்து வருவதால் இந்த தேரினை கண்ணாடி கூண்டு கொண்டு மூட வேண்டும் என்றும் அப்போது தான் ஆழித்தேர் முழுமையாக தெரியும் என்றும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வைத்த வேண்டுகோளின்படி இந்த ஆழித்தேரின் மேற்கூரை மற்றும் 4 பக்கமும் ரூ.40 லட்சம் மதிப்பில்  கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி  கோயில் நிர்வாகம் சார்பில் தற்போது மும்முரமாக  நடைபெற்று வருகிறது.

Related Stories: