போடி, அக் 12: போடியில் கூட்டுறவு பண்டகசாலையின் சார்பில் நகரில் உள்ள 33 வார்டுகளில் 27 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன்கடை ஊழியர்களில் பணியாற்றியவர்களில் பாதி பேர் பணி ஓய்வில் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அனுபவம் இல்லாத 20க்கும் மேற்பட்டவர்களை ரேஷன்கடைகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக தினக்கூலி அடிப்படையில் ஊழியர்களும் வேலை செய்து வருகின்றனர். இதனால் ஒவ்வொரு கடைகளிலும் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. இதனால் கடை ஊழியர்களுக்கும், குடும்ப அட்டை வைத்திருப்போருக்கும் அடிக்கடி தகராறு நடக்கிறது. இந்நிலையில் அதிக விலை கொடுத்து ரேஷன் அரிசி, பருப்பு, பாமாயில்உள்ளிட்ட பொருட்களை வெளிமார்க்கெட் கள்ளச்சந்தை வியாபாரிகள் ெமாத்தமாக வாங்கிச் செல்கின்றனர்.