வன எல்லைப்பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின் இணைப்புகள் குறித்து மின்வாரிய அதிகாரிகளுடன், வனத்துறையினர் ஆய்வு: வனவிலங்குகள் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை

உடுமலை: தர்மபுரி மற்றும் கோவை வனப்பகுதி எல்லைகளில் மின்சாரம் தாக்கி காட்டு  யானைகள் இறந்ததை தொடர்ந்து திருப்பூர் வனக்கோட்டத்தில் சோதனை பணிகளை  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் வனக்கோட்டத்தில் வன எல்லைப்பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் அமைந்துள்ள விளைநிலங்கள் மற்றும் அருகில் உள்ள கிராமங்களிலும் வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வண்ணம் மின் இணைப்புகள் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளதா என்றும் சோலார் மின்வேலிகளில் திருட்டுத்தனமாக மின்சாரம் பாய்ச்சப் படுகிறதா என்பதையும்  மின் வாரிய பணியாளர்களுடன் வனப்பணியாளர்கள் இணைந்து தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உடுமலைவனச்சரகத்தில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ள ஜல்லிபட்டி,கொங்குரார்குட்டை பகுதிகளில் உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் கணேஷ்ராம், உடுமலை வனச்சரகர் சிவக்குமார் மற்றும் குழுவினர் மின் இணைப்புகள் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளதா என்றும் சோலார் மின் வேலிகளில் திருட்டுத்தனமாக மின்சாரம் பாய்ச்சப்படுகிறதா என்பதை தணிக்கை செய்து மக்களுக்கு தாழ்வாக செல்லும் மின் இணைப்புகளால் வன உயிரினங்கள் குறிப்பாக யானைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்களையும், சோலார் மின் வேலிகளை சட்டப்படி முறையாக பயன்படுத்துமாறும் அறிவுறுத்தினர். வன எல்லைப்பகுதிகளில் தாழ்வாக மின் இணைப்புகள் அமைக்கப்பட்டிருந்தாலோ, சட்டத்திற்கு புறம்பாக மின்சாரத்தை பயன்படுத்தி மின் வேலி அமைக்கப்பட்டிருந்தாலோ அதன் விவரங்களை உடுமலை வனச்சரகம்:9487987173, 7502289850, 9486659701, 9487787731.,அமராவதி வனச்சரகம்: 9047066460, 9486587797.,கொழுமம் வனச்சரகம்: 8072981528, 8778725381 ஆகிய செல்போன் எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Related Stories: