பாடல் காப்புரிமையை இளையராஜா தயாரிப்பாளர்களுக்கு வழங்குவதில்லை: ஐகோர்ட்டில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வாக்குமூலம்

சென்னை: இளையராஜா தனது பாடல்களின் காப்புரிமையை என்றைக்குமே தயாரிப்பாளர்களுக்கு வழங்கியது இல்லை என்று அவருக்கு ஆதரவாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் மியூசிக் மாஸ்டர் என்ற இசை வெளியீட்டு நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில், இளையராஜா இசையமைத்த பாண்டியன், குணா, தேவர் மகன், பிரம்மா போன்ற 109 திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் அந்த படங்களின் இசை வெளியீட்டு உரிமையை இளையராஜாவின் மனைவி ஜீவா நடத்திய இசை நிறுவனத்திடம் இருந்து தங்கள் நிறுவனம் பெற்றுள்ளது.

எனவே, தங்களது அனுமதியின்றி அந்த பாடல்களை யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தது. இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது இளையராஜா தரப்பில், ‘கடந்த 1997ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தபோது, யூடியூப், சமூக வலைதளங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆடியோ ரிலீஸ் தொடர்பாக மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் ஏற்கனவே இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இந்நிலையில் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி இந்த வழக்கில் நேற்று மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அவரது வழக்கறிஞர் ஏ.சரவணனுடன் வந்து ஆஜராகி சாட்சியமளித்தார். சாட்சியத்தில், இளையராஜாவின் பாடல்கள் அவருக்கே சொந்தம்.

இளையராஜா தனது பாடல்களின் காப்புரிமையை என்றைக்குமே தயாரிப்பாளர்களுக்கு வழங்கியது இல்லை. அவருக்கு தான் காப்புரிமை உள்ளது. பட தயாரிப்பாளர்களுக்கு சம்பந்தப்பட்ட படத்தில் பயன்படுத்துவதற்கான உரிமையை மட்டுமே அளித்துள்ளார் என்று கூறினார். இதையடுத்து விசாரணை வரும் 20ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Related Stories: