சென்னை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு மருத்துவ உதவி நிதியாக தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் நிதியை மு.க.ஸ்டாலின் வழங்கினார். கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக கலைஞர் அளித்த ரூ.5 கோடியில் கிடைக்கும் வட்டியில் மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது.
ரூ.5 கோடியில் 1 கோடியை தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு 2007ல் கலைஞர் வழங்கினார். மீதமுள்ள ரூ.4 கோடியில் கிடைக்கும் வட்டியில் தொடர்ந்து உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதுவரை ரூ.6 கோடியே 39 லட்சத்து 90 ஆயிரம் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் வட்டியில் நலிந்தோர் மற்றும் மருத்துவம் உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்தை திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து போகும் செலவை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவு காசோலையாக அனுப்பப்படுகிறது. இந்த தகவலை திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.
