காதல் படுத்தும் பாடால் பாதிக்கும் கல்வி ஒரு பையன்கிட்ட 2 பேர் சாட்டிங்: 30 மாணவிகள் குடுமிப்பிடி சண்டை

திருப்பூர்: திருப்பூர் ஊத்துக்குளி ரோடு புதுராமகிருஷ்ணா புரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் புதுராமகிருஷ்ணாபுரம் பவானிநகர் காட்டுப்பகுதியில் திரண்ட அப்பள்ளியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவிகள் ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டனர். பள்ளி மாணவிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்வதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே அங்கு சென்று மோதலை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் மாணவிகளிடம் விசாரித்தனர். அப்போது காதலனுக்காக 2 மாணவிகள் சண்டையிட்டுக்கொண்டது தெரியவந்தது. இப்பள்ளியில் படிக்கும் மாணவி, மாணவனை காதலித்துள்ளார். அந்த மாணவனுக்கு மற்றொரு மாணவி வாட்ஸ் அப் மூலம் பல்வேறு தகவல்களை அனுப்பியுள்ளார். சாட்டிங்கிலும் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த அந்த மாணவனை காதலித்த மாணவி, ‘‘எப்படி நான் காதலிக்கும் மாணவனுடன் சாட்டிங்கில் ஈடுபடலாம்?’’ என தட்டிக்கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் இந்த பிரச்னை தொடர்பாக பேசுவதற்காக 2 மாணவிகளும் தங்களுடன் படிக்கும் தோழிகளை புதுராமகிருஷ்ணாபுரம் பவானிநகர் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு இரு தரப்பு மாணவிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சுமூக முடிவு ஏற்படாமல் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் தலையிட்டு தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் இரு தரப்பு மாணவிகளிடமும் விசாரணை நடத்தி வருகிறார். காதலனுக்காக பள்ளி மாணவிகள் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: