பல்லாவரம் நகராட்சி வழக்கு தொடர்பாக ஈரோடு மாநகராட்சி கமிஷனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

ஈரோடு: செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் நகராட்சி வழக்கு தொடர்பாக, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். ஈரோடு மாநகராட்சி கமிஷனராக சிவக்குமார் உள்ளார். இவர் ஈரோடு பெரியார் நகரில் உள்ள மாநகராட்சி ஆணையாளர் குடியிருப்பில் வசித்து வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் நகராட்சியில் கமிஷனராக சிவக்குமார்  இருந்தபோது பதிவு செய்யப்பட்ட லஞ்ச வழக்கு தொடர்பாக ஈரோட்டில் அவர் வசிக்கும் வீட்டில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை ஈரோடு பெரியார் நகரில் உள்ள மாநகராட்சி ஆணையாளர் வீட்டுக்கு வந்தனர். அப்போது ஆணையாளர் சிவக்குமார் சென்னையில் இருப்பது தெரியவந்தது. அவருக்கு  லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து அவர் சென்னையில் இருந்து  மதியம் 3.50 மணியளவில் ஈரோட்டில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தடைந்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான 5 பேர் அவரது வீட்டுக்குள் சென்று சோதனை நடத்தினர். வீட்டின் அனைத்து அறைகளையும் சோதனையிட்டனர்.  வளாகத்தில் நிறுத்தி இருந்த கார்களிலும் பணம், ஆவணங்கள் ஏதாவது பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை செய்தனர். இந்த சோதனை இரவு வரை தொடர்ந்தது. ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், கடந்த மாதம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: