ஈரோட்டில் ‘தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்’ , மரக்காணத்தில் “பன்னாட்டுப் பறவைகள் மையம்!!

சென்னை :ஈரோடு மாவட்டத்தில் ‘தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்’ அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக பட்ஜெட்டில் வெளியாகி உள்ள  அறிவிப்பு!!

அழிந்து வரும் வன உயிரினங்களைக் காக்க ஒரு தொடர்ச்சியான பாதுகாக்கப்பட்ட வனப்பரப்பு அவசியம். எனவே, நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தை, தென்காவிரி வனவிலங்கு சரணாலயத்துடன் இணைக்கும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர், கோபிசெட்டிபாளையம் வட்டங்களில் உள்ள 80,567 ஹெக்டேர் வனப்பரப்பில் “தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்” என்னும் புதிய சரணாலயத்தை இந்த அரசு ஏற்படுத்தும். இது மாநிலத்தின் 18வது வனவிலங்கு சரணாலயமாகும்.

மத்திய ஆசியாவின் பறவைகள் வலசைப் பாதையில் தமிழ்நாடு அமைந்துள்ளதால், ஒவ்வொரு ஆண்டும் பெரும் எண்ணிக்கையில் பறவைகள் நமது மாநிலத்திற்கு வருகை தருகின்றன. பறவைகளின் பாதுகாப்பைப் பேணவும், பறவையியல் ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும், இயற்கையில் பறவைகளின் பங்கைப் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும், மரக்காணத்தில் ரூ. 25 கோடி செலவில் “பன்னாட்டுப் பறவைகள் மையத்தை” அரசு அமைக்கவுள்ளது.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் மகளிரின் முக்கியப் பங்கை உணர்ந்துள்ள இந்த அரசு, மகளிர் சுயஉதவிக் குழுக்களின் மூலம் காலநிலை மாற்ற வீராங்கனைகள்” என்ற காலநிலை விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கும். சுற்றுச்சூழல், காலநிலைமாற்றம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக முதற்கட்டமாக 500 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இந்த சுற்றுச்சூழல் பற்றிய பரப்புரையை முன்னெடுப்பார்கள். இதற்காக, அவர்களுக்கு ரூ. 20 கோடி செலவில் மின் ஆட்டோக்கள் வழங்கப்படும். இந்த வரவு-செலவுத் திட்டத்தில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறைக்கு ரூ. 1,248 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Stories: