ஈஞ்சம்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: மரக்கன்றுகளை நட்டு மகிழ்ந்தனர்

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஈஞ்சம்பாக்கம் ஊராட்சியில் ஆதிதிராவிட நல மேல்நிலை பள்ளி உள்ளது. இங்க, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு (1993-1996) பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட முன்னாள் மாணவர்கள், தங்களின் மனைவி குழந்தைகளுடனும், முன்னாள் மாணவிகள் தங்களின் கணவர், குழந்தைகளுடனும் கலந்து கொண்டனர். நீண்ட நாள் கழித்து பள்ளிக்குள் வரும் நினைவுடன் பள்ளி வளாகத்தை சுற்றி பார்த்தனர். மேலும், பழைய பள்ளியின் சம்பவங்களை நினைவுப்படுத்தி பயின்ற பள்ளி வகுப்பறைகளை பார்த்து, தாங்கள் அமர்ந்த இருக்கைகளில் அமர்ந்து, அன்றைய ஆசிரியர்கள் நடத்திய பாடங்கள், அதனை எவ்வாறு நாம் கற்று கொண்டோம் போன்ற பழைய நினைவுகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டானர்.

அன்று படித்த மாணவ, மாணவிகள் பல்வேறு துறைகளில் முன்மாதிரியாக விளங்கி வந்தாலும், பள்ளிக்கு வந்த பின்பு நாம் ஒரு மாணவர்கள் என்பதுபோல, பள்ளி பருவத்தில் அழைத்த பழைய புனைப் பெயர்களையும் கூப்பிட்டு தங்களின் நண்பர்களை அழைத்து மகிழ்ந்தனர். இதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். முன்னாள் ஆசிரியர்கள், தற்போதைய தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். கடந்த 30 ஆண்டுகள் கழித்து முன்னாள் மாணவர்கள் இப்பள்ளியை மீண்டும் நினைவில் கொண்ட இந்த சம்பவம் இப்பகுதி பள்ளி மாணவர்கள் மத்தியிலும் கிராமப்புற மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories: