படம் ஓடாததால் சம்பளத்தை விட்டுக் கொடுத்த சம்யுக்தா

சென்னை: படம் தோல்வி அடைந்ததால் தனது சம்பளத்தில் ஒரு பகுதியை நடிகை சம்யுக்தா விட்டுக் கொடுத்துள்ளார். வாத்தி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் சம்யுக்தா. மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். எடக்காடு பட்டாலியன் 06 என்ற படத்தில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன் சம்யுக்தா நடித்தார். அதில் தனது ஒரு பகுதி சம்பளத்தை மட்டுமே வாங்கினார் என தயாரிப்பாளர் சோபியா பால் கூறியுள்ளார். இது குறித்து சோபியா பால் கூறும்போது, ‘எடக்காடு பட்டாலியன் 06 படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் 65 சதவீதம் சம்பளத்தை சம்யுக்தாவுக்கு கொடுத்துவிட்டேன்.

மீதி சம்பளத்தை டப்பிங் பேசிய பிறகு தருவதாக சொல்லியிருந்தேன். அதில் தாமதம் ஏற்பட்டது. படம் திரைக்கு வந்துவிட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இதில் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. திடீரென ஒரு நாள் சம்யுக்தாவிடமிருந்து செல்போனில் மெசேஜ் வந்தது. படம் சரியாக போகவில்லை என தெரிந்தது. வருத்தமாக உள்ளது. நீங்கள் தர வேண்டிய பாக்கி சம்பளத்தை எனக்கு தர வேண்டாம். அதற்கு பதிலாக நல்ல கதை அமையும்போது மீண்டும் உங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள் என சொல்லியிருந்தார். அவரது பெரிய மனதை பார்த்து நான் வியந்து போனேன்’ என்றார்.

Related Stories: