தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கேரளாவிற்கு 19 டன் பாமாயில் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது: டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

களக்காடு:  கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே பழவிளை அடுத்த புத்தன்வீடு பகுதியைச் சேர்ந்தவர் பிஜுமோன். லாரி டிரைவரான இவர், தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 19 டன் பாமாயில் எண்ணெயை லாரியில் ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரம் நோக்கி  சென்று கொண்டிருந்தார்.

நேற்று அதிகாலை 4 மணியளவில் நெல்லை மாவட்டம் பாணான்குளம் காவல் நிலையம் எதிரே உள்ள நான்குவழிச் சாலையில் லாரி வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த தடுப்பு கம்பிகள் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் பிஜுமோன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதில் லாரி பலத்த சேதம் அடைந்தது. தகவலின் பேரில் அங்கு வந்த நாங்குநேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் போக்குவரத்து தடை ஏற்படாமல் இருக்க கொட்டிய எண்ணெய் உடனடியாக அகற்றப்பட்டது. தொடர்ந்து கவிழ்ந்த லாரியில் இருந்த பாமாயில் எண்ணெயை வேறு லாரியில் ஏற்றும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.

மழை பெய்த நிலையில் மீட்பு பணிகளில் துரிதமாக செயல்பட்டு பிற்பகல் 2 மணியளவில் முழுவதுமாக அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து மூன்றடைப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: