உடுமலையில் அறிவியல் திருவிழா கண்காட்சி மாணவர்களுடன் இஸ்ரோ விஞ்ஞானிகள் கலந்துரையாடல்

உடுமலை : தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், தொண்டு நிறுவனம் மற்றும் தனியார் கல்லூரி இணைந்து பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் விழிப்புணர்வு போட்டிகள், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மற்றும் அறிவியல்சார் பயிற்சி பட்டறை  தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் வரவேற்றார்.தொண்டு நிறுவன தலைவர் மணி முன்னிலை வகித்தார். தனியார் கல்லூரி செயலர் தலைமை வகித்தார். அமிர்தநேயன், உடுமலை வட்டார கல்வி அலுவலர் சரவணகுமார் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பொள்ளாச்சி எம்.பி.சண்முகசுந்தரம் கேட்ட இரண்டு கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்த ஆறு பள்ளி மாணவர்களை வருகின்ற மார்ச் 15ம் தேதி விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் திருவனந்தபுரத்துக்கு அழைத்துச் செல்ல உறுதியளித்து, அதற்கான ஏற்பாடுகளை கலிலியோ அறிவியல் கழகம் செய்யும் என்று கூறினார்.

தொடர்ந்து அறிவியல் கண்காட்சியை சண்முகசுந்தரம் எம்பி., தொடங்கி வைத்தார். பெங்களூரு இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இணை இயக்குனர் வளர்மதி, பள்ளி மாணவர்களிடம் அறிவியல் சார்ந்த படிப்புகள் குறித்தும், மாணவர்கள் தங்களை பள்ளி பருவத்திலே அறிவியல் சார் செயல்பாடுகளில் எவ்வாறு ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். நமது இந்திய நாட்டின் விண்வெளித் துறை வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்களிப்பை எவ்வாறு செய்ய முடியும் என்று கலந்துரையாடினார்.

தொடர்ந்து விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி சசிக்குமார் மாணவர்களுடன் கலந்துரையாடினார். ராக்கெட் குறித்தும், ராக்கெட் ஏவுதல் குறித்த பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார். தமிழில் அறிவியலை பரப்புவதற்காக சுமார் பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். மதியம் பள்ளி மாணவர்களுக்கு பகல் நேர வானியல் என்ற தலைப்பில் பத்துக்கும் மேற்பட்ட செயல்பாடுகளை மாணவர்கள் தாங்களாகவே செய்து பார்க்கும் படியாக நிகழ்வு நடைபெற்றது. நிறைவு விழாவிற்கு வருகை தந்தவர்களை பூலாங்கிணறுஅரசு மேல்நிலைப்பள்ளி  நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சரவணன் வரவேற்றார்.

கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். தனியார்  கல்லூரி முதல்வர் பிருந்தா தலைமை வகித்தார்.தனியார்  மேல்நிலைப்பள்ளி தாளாளர் மூர்த்தி அறிவியலும் வாழ்வியலும் என்ற தலைப்பில் அறிவியல் கருத்துரை வழங்கினார். இமானுவேல் நெல்சன், முனைவர் ஸ்ரீதர் ராமமூர்த்தி ஸ்ரீஹரி, அசோகன், கண்டிமுத்து, செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு விருந்தினராக வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணாபங்கேற்றார். அறிவியல் கண்காட்சி மற்றும் அறிவியல் பரிசோதனைகள் நிகழ்வில் கலந்து கொண்ட வெற்றி பெற்ற மாணவர்கள், பேச்சு, கட்டுரை, ஓவியம் ஆகிய போட்டிகளிலே வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 400க்கும்  மாணவர்கள் அறிவியல் திருவிழாவில் கலந்து கொண்டனர்.  ஏற்பாடுகளை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் மற்றும் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.

Related Stories: