திருவனந்தபுரம்: கோழிக்கோட்டில் இருந்து சவுதி அரேபியா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையில் உரசியபடி பறந்ததால், திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் 168 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து சவுதி அரேபியாவின் தமாம் நகருக்கு ஏர் இந்தியா விமானம் 168 பயணிகளுடன் நேற்று காலை 9.45 மணிக்கு புறப்பட்டது. ஓடுபாதையில் இருந்து மேலே பறக்கத் தொடங்கிய போது, விமானத்தின் பின்பகுதி தரையில் உரசியதாகவும், சிறிது நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், விமானத்தை திருவனந்தபுரத்திற்கு திருப்பி அவசரமாக அங்கு தரையிறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உடனடியாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ குழுவினர் தயார்நிலையில் நிறுத்தப்பட்டனர்.