வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும் இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என்று மொத்தம் 1830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 2வது நிலையின் 2வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வடசென்னை அனல் மின் நிலைய 1வது நிலையின் 3வது அலகில் ஏற்பட்ட கொதிகலன் கசிவு சரிசெய்யப்பட்டு 210 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

வல்லூர் அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் மேற்கொள்ளப்பட்டு வந்த ஆண்டு பராமரிப்பு பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டு மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்ட சூழலில் மற்றொரு புறம் பழுது, பராமரிப்பு பணிகள் முடிந்து 710 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

Related Stories: