டி.கல்லுப்பட்டி அருகே தண்ணீர் குடித்த 16 ஆடுகள் சாவு-விஷம் கலந்ததாக விவசாயி புகார்

பேரையூர் : டி.கல்லுப்பட்டி அருகே கொட்டத்தில் இருந்த தண்ணீரை குடித்த 16 ஆடுகள் மயங்கி விழுந்து இறந்தன. குடிநீரில் மர்ம நபர்கள் விஷம் கலந்திருந்ததாக விவசாயி போலீசில் புகார் அளித்துள்ளார்.மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே வி.கோபாலாபுரத்தை சேர்ந்தவர் மார்கழிவாசன் (41). விவசாயி. வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று ஆடுகளை மேய்த்துவிட்டு மதியம் தனது தோட்டத்திலுள்ள கொட்டத்தில் ஆடுகளை தண்ணீர் குடிக்க வைத்தார். அப்போது தண்ணீர் குடித்த ஆடுகள் ஒவ்வொன்றாக மயங்கி விழுந்து இறந்தன. மொத்தம் 16 ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன. இதனை பார்த்த அவர் மற்ற ஆடுகள் தண்ணீர் குடிக்காமல் பார்த்துக்கொண்டார்.

மேலும் அவற்றை மற்றொரு பகுதிக்கு கொண்டு சென்று அடைத்தார். பின் சம்பவம் குறித்து வில்லூர் காவல்நிலையத்தில் மார்கழிவாசன் புகார் அளித்தார். அதில் தனது ஆடுகள் குடிக்கும் தண்ணீரில் மர்ம நபர் விஷம் கலந்து விட்டதாக கூறியுள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ஆடுகளை வையூர் கால்நடை உதவி மருத்துவர் மோகன்குமார் பரிசோதனை செய்ததுடன், அவற்றின் உடல் பாகங்களை ஆய்வுக்காக மதுரைக்கு அனுப்பி வைத்தார். 16 ஆடுகள் ஒரே சமயத்தில் மயங்கி விழுந்து இறந்த சம்பவம், கால்நடைகள் வளர்ப்போர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: