ஏழைகளின் ஊட்டியான ஏலகிரி மலையில் விடுமுறை நாளில் குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் படகு சவாரி-பறவைகள், செல்லப்பிராணிகளோடு விளையாடினர்

ஏலகிரி :  சுற்றுலாத்தலமான ஏலகிரியில் விடுமுறை நாளில் குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் படகில் சவாரி செய்து மகிழ்ந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகவும் ஏழைகளின் ஊட்டியாகவும் விளங்கி வருகிறது. இம்மலை பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜோலார்பேட்டை அருகில் அமைந்துள்ளது.

இம்மலை 1410 மீட்டர் உயரத்தில் 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டு உயர்ந்த மலைப்பகுதியில் நான்கு மலைகளால் சூழப்பட்டு  இயற்கை நிறைந்த சூழலில் 14 கிராமங்களை உள்ளடக்கி பசுமை நிறக் கோலத்தில் காட்சியளிக்கிறது.ஏலகிரி மலை தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலாத்தலம் என்பதால் வெளிநாடு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும், இந்த சுற்றுலாத்தலத்தினை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால்   ஏலகிரியில் அண்டை பகுதி உள்ள சுற்றுலா பயணிகள் திரண்டனர்.

இங்கு முக்கிய சுற்றுலா தலங்கலான படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, மூலிகை பண்ணை, மங்கலம் சுவாமிமலை ஏற்றம், பண்டேரா பார்க், செல்பி பார்க், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட ஏராளமான சுற்றுலாத்தலங்கள் உள்ளன. படகு இல்லத்தில் குடும்பத்தோடும், நண்பர்களோடும் படகு சவாரி செய்தும், இயற்கை பூங்காவில் மலர்களை ரசித்தும், புல் தறையின் மீது அமர்ந்தும், செயற்கை  நீருற்றில்  செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    மேலும் பண்டேரா பார்க்கில் பறவைகளோடும், செல்லப்பிராணிகளோடும், சுற்றுலா பயணிகள் மகிழ்ந்து விளையாடி வருகின்றனர். செல்பி பார்க்கில் குழந்தைகளோடு செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். மேலும் இங்கு சுற்றுலா பயணிகள் காண மூலிகை பண்ணை, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி, மங்களம் சுவாமி மலை ஏற்றம், நிலாவூர் கதவுநாச்சி அம்மன் கோவில், உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் உள்ளன.

ஏழைகளின் ஊட்டியான ஏலகிரியில் அனைத்து சுற்றுலா தலங்களையும் குறைந்த செலவில் பயணிகள் கண்டு மகிழ்ந்து செல்கின்றனர். மேலும் ஏலகிரியில் குறைந்த அளவு சுற்றுலா தலங்கள் இருப்பதால் அரசு நடவடிக்கை எடுத்து கிடப்பில் உள்ள சுற்றுலா தளங்களின் பணிகளை சீரமைத்து சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: