விருதுநகர் நகராட்சி பகுதியில் மூடிக் கிடக்கும் சமுதாயக் கூடங்களை திறக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

விருதுநகர்: விருதுநகர் நகராட்சியில் மூடிக் கிடக்கும் சமுதாயக் கூடங்களை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் நகராட்சியில் நடுத்தர, அடித்தட்டு பொதுமக்களின் குடும்ப விசேஷ நிகழ்ச்சிகள் மற்றும் சிறிய அளவிலான குடும்ப விழாக்களை குறைந்த வாடகையில் நடத்துவதற்காக தியாகி விஸ்வநாததாஸ் காலனி, நாராயணமடம் தெரு, அகமது நகரில் மாவட்ட மைய நூலகம் அருகே என 3 சமுதாயக்கூடங்கள் கட்டப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டன. நகர் மக்களின் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு குறைந்த வாடகையில் விடப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக மூன்று சமுதாயக்கூடங்களும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படாமல் மூடி வைத்துள்ளனர்.

இதனால் நடுத்தர, அடித்தட்டு மக்களின் இல்ல விசேஷ நிகழ்ச்சிகளை நடத்த குறைந்த வாடகையில் மண்டபம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, நகரில் மூடிக்கிடக்கும் 3 சமுதாயக்கூடங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் நீதிமய்ய மாவட்ட செயலாளர் காளிதாஸ் கூறுகையில், ‘சிரமப்படும் மக்களின் இல்ல நிகழ்ச்சிகளை குறைந்த வாடகையில் பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்ட சமுதாய கூடங்கள் மூடியே கிடப்பதால் சிதிலமடைந்து வருகின்றன. பொதுமக்கள் பயன்படுத்தாத எந்த பொருளும் வீணாகி விடும். எனவே, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சமுதாயக் கூட்டங்களை உடனே சீரமைத்து வாடகையை மறுநிர்ணயம் செய்து விடுவதற்கான நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

Related Stories: