வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 100% மானியத்தில் விவசாயிகளுக்கு கிணறுகளுடன் பம்பு செட்கள்: காஞ்சிபுரம் கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பாசனநீர் ஆதாரங்களை புதிதாக உருவாக்கி அதிக பரப்பில் சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் அதிக விளைச்சல் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு  100 சதவீத மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்து 2021-2022ம் ஆண்டில் ரூ.12 கோடி செலவில் மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசனவசதி அமைத்துத்தரப்படும் என வேளாண் துறை அமைச்சர் பேரவையில் அறிவித்தார். அதனடிப்படையில், தமிழ்நாட்டின்  8 மாவட்டங்களில் பாசனநீர் வசதி இல்லாத இடங்களில் 200 சிறு,குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், நிலத்தடி நீர்பாதுகாப்பான குறுவட்டங்களில் வேளாண்மை பொறியியல்துறை மூலம் செயல்படுத்திட தமிழ்நாடு அரசு 9.3.2022   அன்று ஆணை பிறப்பித்து பணிகள் நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீர் பாதுகாப்பாக உள்ள குறுவட்டங்களில் கூடுதலாக 200 ஆதிதிராவிட,  பழங்குடியின பிரிவினை சார்ந்த சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தினை செயல்படுத்த 7.12.2022   அன்று அரசாணை வெளியிடப்பட்டது. தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையினரால் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் 2021-2022ம் ஆண்டு பணி மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்ட 1997  பஞ்சாயத்து கிராமங்களில் உள்ள பாதுகாப்பான குறுவட்டங்களில் திட்டம் செயல்படுத்தப்படும். திட்ட பயனாளிகளுக்கு வருவாய்துறை மூலம் வழங்கப்பட்ட சாதிச்சான்று பெறப்படவேண்டும்.  

சாத்தியமுள்ள இடங்களில் சூரிய சக்தி மூலம் இயக்கப்படும் பம்புசெட் (அதிக பட்சம்  10  குதிரைத்திறன் வரை) அமைத்திடவேண்டும். சம்பந்தப்பட்ட பாதுகாப்பான குறுவட்டங்களில்      உள்ள பயனாளிகள் செயற்பொறியாளர் (வே.பொ.) நந்தனம் மற்றும் உதவி செயற்பொறி யாளர் (வே.பொ) காஞ்சிபுரம் அலுவலகங்களை அணுகலாம். இடத்திற்கு ஏற்றவாறு, குழாய் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைத்தல், நீரினை இறைப்பதற்கு மின்சார சக்தி, சூரியசக்தி மூலம் இயங்கக்கூடிய பம்புசெட் நிறுவுதல், பாசன நீரினை வீணாக்காமல் சாகுபடி செய்யப்படும் வயலுக்கு அருகில் கொண்டுசெல்வதற்கு பாசனநீர் குழாய்கள் நிறுவுதல் மற்றும் நுண்ணீர் பாசன அமைப்புகளை நிறுவுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

பிரதம மந்திரி நீர்ப்பாசன திட்டம்  ஒவ்வொரு வயலுக்கும் நீர் -  நிலத்தடி நீர்ப்பாசனத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைபடி செயல்படுத்தப்படும். அரசினால் நிர்ணயிக்கப்பட்ட ஆழத்திற்கும் அதிகமாக கிணறு அமைக்கவேண்டும் என்றாலோ அல்லது கூடுதல் குதிரைத்திறன் கொண்ட பம்புசெட் நிறுவவேண்டும் என்றாலோ, அதற்கான கூடுதல் செலவை சம்பந்தப்பட்ட விவசாயிகளே ஏற்றுக்கொள்ளவேண்டும். சிறு மற்றும் குறு விவசாயிகளாக உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாசன அமைப்புகளை உருவாக்கி தங்களது நிலத்தில் சாகுபடி மேற்கொள்ளவேண்டும் என்ற உயரிய எண்ணத்தில்,  தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திய திட்டத்தை காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திட காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம். காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் செயற்பொறியாளர் (வே.பொ.) 487, அண்ணாசாலை, நந்தனம், சென்னை-35. உதவி செயற்பொறியாளர் (வே.பொ.), வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையம், பஞ்சுப்பேட்டை (90030 90440) என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: