கஞ்சா கடத்தல் கும்பலுக்கு உதவிய சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

ஈரோடு: கோவை மாநகரில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில் கோவை ரத்தினபுரி போலீசார் கடந்த 20ம் தேதி சங்கனூர் பள்ளம் பகுதியில் மேற்கொண்ட சோதனையில் 8.2 கிலோ கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக கோவை காரமடை அண்ணா வீதியை சேர்ந்த சந்திரபாபு (33) என்பவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சாவை ஆந்திராவில் இருந்து வாங்கி விற்பனை செய்வதாகவும், மேலும் 11 பேருக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் சந்திரபாபு கூறினார்.

இதன்பேரில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கோவையில் போதை பொருட்கள் தடுப்பு பிரிவு போலீஸ் எஸ்ஐயாக பணியாற்றி, தற்போது ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் எஸ்ஐயாக பணியாற்றி வரும் ஈரோடு கொல்லம்பாளையம் டி.வி.கே. நகரை சேர்ந்த மகேந்திரனுக்கு (34) கஞ்சா விற்பனையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர் கஞ்சா விற்பவர்களுக்கு உதவியதும், கைதான சந்திராபாபுவுக்கும், மகேந்திரனுக்கும் பல முறை பண பரிமாற்றம் நடந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, மகேந்திரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கஞ்சா விற்பனைக்கு உதவிய எஸ்ஐ மகேந்திரனை, கோவை சரக டிஐஜி விஜயகுமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Related Stories: