புழல்: மாதவரம் அருகே திருமணம் முடிந்த கையோடு உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ மணமகளை ரேக்ளா வண்டியில் மணமகன் அழைத்து சென்ற ருசிகர சம்பவம் நடந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் புதுமண தம்பதிகள், தங்களது திருமண நிகழ்வை ஏதாவது ஒரு வகையில் வித்தியாசமாக நடத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். குறிப்பாக, கடலுக்கு அடியில் திருமணம் செய்வது, வானில் பறந்தபடி திருமணம் செய்வது உள்ளிட்ட வகையில் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது ஒரு புதுமண தம்பதி ரேக்ளா வண்டியில் சென்று பலரது கவனத்தை ஈர்த்துள்ளனர். மாதவரம் அடுத்த வடபெரும்பாக்கம் செட்டிமேடு பகுதியை சேர்ந்த விவசாயி கோபால் - கண்ணகி ஆகியோரின் மகன் விஜய்க்கும், ஆனந்தன்-மேரி ஆகியோரின் மகள் ரம்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு குலதெய்வம் கோயிலில் நேற்று திருமணம் நடந்தது.