பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்பில் கராச்சியில் 2வது மனைவியுடன் தாவூத் உல்லாசமாக வாழ்கிறார்: சகோதரியின் மகன் பரபரப்பு வாக்குமூலம்

மும்பை:  பாகிஸ்தானின் கராச்சியில் ராணுவ பாதுகாப்பு மிகுந்த பகுதியில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் தனது 2வது மனைவி, மகள்களுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பதாக அவரது சகோதரி மகன் தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) வாக்குமூலம் அளித்துள்ளார். மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தேடப்படும் குற்றவாளியாக உள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளான். ஆனால் இத்தகவலை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. இதற்கிடையே, இந்தியாவில் தாவூத் கும்பலையும், தீவிரவாத நெட்வொர்க் குறித்தும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு நவம்பரில், மும்பையில் வசிக்கும் தாவூத் உறவினர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது தாவூத்தின் சகோதரி ஹசீனா பார்க்கரின் மகன் அலி ஷா பார்க்கர் அளித்த வாக்குமூலம் என்ஐஏ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதில் அலி ஷா பார்க்கர் கூறியிருப்பதாவது: தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானை சேர்ந்த பதான் குடும்பத்தை சேர்ந்த மைசாபினை 2வது திருமணம் செய்துள்ளார். முதல் மனைவி மெஜபீன் ஷேக்கை அவர் விவாகரத்து செய்து விட்டதாக கூறினாலும் அதில் உண்மையில்லை. விவகாரத்து வாங்காமலேயே 2வது திருமணம் செய்துள்ளார். இதை துபாயில் மெஜபீனை சந்தித்த போது அவரே என்னிடம் கூறினார். தாவூத் தனது 2வது மனைவி, மகள்கள் மரூக் (பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாவேத் மியான்டட்டின் மகன் ஜூனைத்தை மணந்தவர்), மொஹின் நவாஸ் , மசியா ஆகியோருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். தாவூத் தனது குடும்பத்துடன் கராச்சியில் உள்ள அப்துல்லா காசி பாபா தர்காவுக்கு பின்புறம் உள்ள  ராணுவ பாதுகாப்பு மிகுந்த பகுதியில் வசித்து வருகிறார். இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

Related Stories: