ஜனாதிபதியோ, ஆளுநரோ நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல கட்டுப்பட்டவரல்ல: ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு தலைவராக உள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிப்பதால், எந்த தகுதியின் அடிப்படையில் ஆளுநர் பதவியில் நீடிக்கிறார் என விளக்கமளிக்க  உத்தரவிடக் கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், ஆரோவில் அறக்கட்டளை சட்டப்படி, தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டவருக்கு ஊதியம், படி, ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்கப்படும் என்பதால் அவர் ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிக்கிறார்.

இந்திய அரசியல் சாசனம் 158 (2) வது பிரிவின்படி, ஆளுநராக பதவி வகிப்பவர், ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிக்க கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், ஆரோவில் அறக்கட்டளை தலைவராக பொறுப்பேற்ற நாளில் இருந்து ஆர்.என்.ரவி, ஆளுநராக பதவியில் நீடிக்க தகுதியிழப்பு ஆகிறார் என்று  கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசரணைக்கு உகந்தது தானா என்பது குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பதவியில் இருக்கும் ஜனாதிபதியோ, ஆளுநரோ நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல கட்டுப்பட்டவரல்ல என கருத்து தெரிவித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

Related Stories: