பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள் பிரதமர் தேகவுடாவின் பேரன் பிரஜ்வல் மீது புதிய வழக்கு : கைது செய்ய ஜெர்மனி விரைகிறது தனிப்படை?

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவை பிடிக்க சிறப்பு புலனாய்வுக் குழு ஜெர்மனி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடக ஹாசன் தொகுதி மத சார்பற்ற ஜனதா தள எம்.பியும், இத்தேர்தலில் ஹாசன் தொகுதியின் பாஜ – மஜத கூட்டணி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பலாத்காரம் செய்து எடுத்த வீடியோக்கள் பரவி, தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே ஆபாச வீடியோ வெளியான மறுநாளே பிரஜ்வல் ஜெர்மனிக்கு சென்றார். இதைத் தொடர்ந்து, பிரஜ்வல் ரேவண்ணா இந்தியாவிற்குள் எந்த வழியாக வந்தாலும் உடனடியாக கைது செய்யும் விதமாக அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பிரஜ்வல் மட்டுமின்றி அவரது தந்தை ரேவண்ணா மீதும் முன்னாள் பணிப்பெண் ஹோலேநரசிப்புரா போலீசில் பாலியல் புகார் செய்தார். அவர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரையும் விசாரணைக்கு ஆஜராகும்படி வீட்டில் எஸ்ஐடி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான் பிரஜ்வல் ரேவண்ணா மீது இரண்டாவதாக ஒரு பெண் புகார் அளித்துள்ளார். பிரஜ்வல் தன்னை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக நீதிபதியிடம் பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். பெண் அளித்த புகாரின் பேரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறப்பு புலனாய்வுக் குழு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. புதிய புகாரால் பிரஜ்வல் ரேவண்ணாவை உடனடியாக கைது செய்ய சிறப்பு புலானாய்வுக் குழு திட்டம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலியல் பலாத்கார வழக்கு ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவின் கீழ் உள்ளதால் பிரஜ்வல் கைது செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. ஹொலேநரசிப்பூரில் முதலில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ரேவண்ணா முதல் குற்றவாளியாகவும் பிரஜ்வல் 2-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். பெங்களூருவில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா மட்டுமே குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.முன்னதாக தந்தை ரேவண்ணா, மகன் பிரஜ்வல் ஆகியோர் வீடுகளில் சிறப்பு புலனாய்வு குழு நள்ளிரவில் சோதனை செய்து பல முக்கிய சாட்சியங்களை கைப்பற்றின.

 

The post பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள் பிரதமர் தேகவுடாவின் பேரன் பிரஜ்வல் மீது புதிய வழக்கு : கைது செய்ய ஜெர்மனி விரைகிறது தனிப்படை? appeared first on Dinakaran.

Related Stories: