திருப்பத்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் ஆணையாளர், டிஎஸ்பிக்கு ‘மெமோ’: கலெக்டர் அதிரடி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் பஸ் நிலையம், புதுப்பேட்டை ரோடு, ஜின்னா ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்பு அதிகளவில் உள்ளது. நடைபாதை கடைகள், தள்ளுவண்டி கடைகள் அதிகளவு உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து கலெக்டர் அமர்குஷ்வாஹா பஸ் நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தார்.

அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி நகராட்சி ஆணையாளர், டிஎஸ்பி ஆகியோருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்துள்ளனர். இதையடுத்து நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா, டிஎஸ்பி கணேசன் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு கலெக்டர் அமர்குஷ்வாஹா நேற்று முன்தினம் ‘மெமோ’ வழங்கி உத்தரவிட்டார். இதனையடுத்து பஸ் நிலையம், ஜின்னாரோடு உட்பட பல்வேறு பகுதிகளில் நடைபாதைகளில் வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்கள், போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தி இரவு முதல் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களுக்கு இடையூறாக மீண்டும் கடை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

Related Stories: