மானாமதுரை அருகே ஆயிரம் ஆண்டு பழமையான விநாயகர் சிலை கண்டுபிடிப்பு

மானாமதுரை : மானாமதுரை அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய விநாயகர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மிளகனூரில் வரசித்தி விநாயகர் கோயில் உள்ளது. இங்கு பழமையான சிற்பம் இருப்பதாக கோவிந்தன் என்பவர் பாண்டியநாடு பண்பாட்டு மையத்திற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து பண்பாட்டு மையத்தை சேர்ந்த மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன், க.புதுக்குளத்தை சேர்ந்த சிவக்குமார் ஆகியோர் கோயிலில் கள ஆய்வு செய்தனர். அப்போது அந்த சிற்பம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்த விநாயகர் சிற்பம் என்று தெரியவந்தது.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘இந்த விநாயகர் சிற்பம் இரண்டரை அடி உயரமும், இரண்டு அடி அகலமும் கொண்ட ஒரு பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. சிற்பமானது நான்கு கரங்களுடனும் அதில் வலது பின் கரத்தில் மழுவும், இடது பின் கரத்தில் பாசம் என்ற ஆயுதமும், வலது முன் கரத்தில் அபய முத்திரையுடனும், இடது முன்கரத்தில் மோதகத்தை பிடித்த படியும் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. தலையில் கிரீடம் தரித்தும் அகன்ற இரண்டு காதுகளுடன் அழகாக செதுக்கப்பட்டுள்ளது.

வயிற்றுப் பகுதி வரை நீண்ட துதிக்கையும் இரண்டு தந்தங்களுடனும் சிற்பம் நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு கரங்களிலும் ஆபரண அணிகலன்கள் அணிந்தபடியும் இரண்டு கால்களிலும் வீரக்கழலை அணிந்தபடியும் அமர்ந்த கோலத்தில் முற்கால பாண்டியருக்கே உரித்தான கை வண்ணத்தில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தினை பார்க்கும் போது முற்கால பாண்டியரின் சிவன் கோவில் இங்கு இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. கால ஓட்டத்தில் அந்த கோவில் அழிந்திருக்க வேண்டும்’’ என்றனர்.

இதேபோல் பாண்டியநாடு பண்பாட்டு மைய குழுவினர் மானாமதுரை அருகே விளத்தூர் கிராமத்தில் கள ஆய்வு செய்ததில், நாயக்கர் காலத்து போர்வீரன் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. குழுவினர் கூறுகையில், ‘‘இந்த சிற்பமானது 5 அடி உயரத்தில் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. கீழ்புறம் ஒரு கூம்பு போன்ற அமைப்புடன் கூடிய திண்டின் மேல் நின்றபடி செதுக்கப்பட்டுள்ளதை பார்க்கும் போது இந்த பகுதியில் இவருக்கென்று ஒரு கோவில் இருந்திருக்கலாம் அல்லது ஒரு கோவிலில் இருந்த சிற்பமாக இருக்கலாம். அவை காலஓட்டத்தில் அழிந்திருக்கலாம்’’ என்றனர்.

Related Stories: