தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னர் ராஜராஜ சோழன் 1037ம் ஆண்டு சதய விழா மங்கள இசை, திருமுறை அரங்கத்துடன் நேற்று துவங்கியது.
தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டி, தமிழர்களின் கட்டிட கலையையும், சிற்ப கலையையும் உலகிற்கு பறைசாற்றிய தஞ்சாவூரை ஆண்ட சோழ பேரரசன் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார்.
அவர் பிறந்த தினம் ஆண்டுதோறும் அரசு சார்பாக சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037வது பிறந்தநாள் சதய விழா நேற்று காலை 9 மணியளவில் மங்கள இசை மற்றும் திருமுறை அரங்கத்துடன் துவங்கியது. இதையொட்டி பெருவுடையார் மலர் அலங்காரத்திலும், பெரியநாயகி சந்தன அலங்காரத்தில் காட்சியளித்தனர்.
தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான மாமன்னன் ராஜராஜன் சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. சதயவிழாவையொட்டி இன்று தஞ்சாவூருக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.