ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை பயன்படுத்தி கிராமத்தை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்ல வேண்டும்-கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்

திருச்சுழி : பொதுமக்கள் தங்கள் ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் கிராமத்தை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்ல வேண்டும் என, கலெக்டர் மேகநாத ரெட்டி தெரிவித்தார்.திருச்சுழி அருகே முத்துராமலிங்கபுரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இக்கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் மேகநாதரெட்டி கலந்து கொண்டார். கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை பாராட்டி பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கவுரவிக்கப்பட்டன. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமிடல் இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, இணையவழி வீட்டு வரி, சொத்து வரி செலுத்துதல், மகளிர் சுய உதவிக்குழு உருவாக்குதல், பண்ணை சார்ந்த தொழில்கள் மற்றும் பண்ணை சாரா தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து விவாதம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து, முத்துராமலிங்காபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை ஆய்வு செய்து, அங்கு பயிலும் மாணவர்களிடம் இல்லம் தேடி கல்வி குறித்தும், கல்வி கற்பிக்கும் முறை குறித்தும், கல்வியின் தரம் குறித்தும், தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.பின்னர், முத்துராமலிங்காபுரம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் முத்துராமலிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தேசியமாணவர் படை, நாட்டுநலப்பணித்திட்ட மாணவ, மாணவிகளுடன் மியாவாக்கி முறையில் மரம் நடும் பணிகளை துவக்கி வைத்தார்.

மேலும், பொதுமக்கள் தங்கள் ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் கிராமத்தை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்ல வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர்கள் திலகவதி, தெய்வேந்திரன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் உத்தண்டராமன், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் கோயில்ராஜா, உதவி இயக்குநர் உமா சங்கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சங்கர், நாராயணன், துணை இயக்குநர் யசோதாமணி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் ராஜம், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஸ்வரன், காமேஸ்வரி, ஊராட்சி மன்றத்தலைவர் பூமிநாதன், ஊராட்சி செயலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சுழி அருகே உள்ள தும்முசின்னம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் முத்துமாரி ராமலிங்கம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நீர் நிலை பாதுகாப்பு, வாறுகால், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துவதற்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் பொறியாளர் அர்ஜூனன், ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி, மகளிர் மன்ற குழு, துணைத் தலைவர் அழகு உண்ணாமலை, ஊராட்சி செயலாளர் மேனகா மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து மண்டபசாலை ஊராட்சியில் பாக்கியலெட்சுமி பாண்டியன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லலிதா, துணைத்தலைவர் மணிகண்டன் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

கல்லூரணி ஊராட்சியில் ஊராட்சி மன்றத்தலைவர் இராஜமாணிக்கம் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பற்றாளர் சுதா, ஊ.ம.துணைத்தலைவர் மகாலட்சுமி, அரசு அலுவலர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி இறுதியில் ஊராட்சி செயலர் செல்வக்குமார் நன்றி கூறினார்.

இதனைதொடர்ந்து குல்லம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்றத்தலைவர் மோகன சுந்தரம் மற்றும் து.தலைவர் மார்க்கெண்டையன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கல்லுமடம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத்தலைவர் ராமலெட்சுமி தலைமை தாங்கினார். துணைதலைவர் காளியம்மாள் முன்னிலை வகித்தார்.ஊர்நல அலுவலர் பாண்டியம்மாள் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி பரிசுகள் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில் கல்லுமடம் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

குலசேகரநல்லூர் ஊராட்சியில் ஊராட்சி மன்றத்தலைவர் சிவமாரியப்பன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றிய அலுவலகம் சார்பில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், வார்டு உறுப்பினர்கள் மற்றும் வேளாண்மைத்துறை, நீர்வடி பகுதி மேலாண்மை குழு உறுப்பினர், பள்ளி தலைமையாசிரியர்கள், கால்நடைதுறை உதவி இயக்குநர், ஊராட்சி செயலர் பழனிக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சவ்வாசுபுரம் ஊராட்சி மன்ற தலைவர் இராஜலெட்சுமி சீமைச்சாமி தலைமையில் கிராமசபைக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய அலுவலகம் சார்பில் பற்றாளர் கார்த்திகா, தலைமையாசிரியர்கள், வேளாண்மை துறை அலுவலர்கள், கூட்டுறவுத்துறை, ஊராட்சி செயலர் இராஜபாண்டி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவப்படுத்தினர்.

Related Stories: