புதுடெல்லி: ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைக்கும் திட்டத்திற்கு தடை விதித்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம், தனியாக பிரிந்த பின்னர், ஐதராபாத் தெலங்கானாவின் நிரந்தர தலைநகரமானது. இதனால், ஆந்திராவுக்கு குண்டூர்-விஜயவாடா இடையே மாநிலத்தின் மையப் பகுதியில் தலைநகரம் அமைக்க சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது, விவசாயிகளிடம் இருந்து நிலங்கள் பெறப்பட்டன. ஆனால், ஜெகன் மோகன் ஆட்சிக்கு வந்ததும், 3 தலைநகரங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அமராவதியில் சட்டப்பேரவையும், கர்னூலில் உயர் நீதிமன்றமும், விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகமும் செயல்படும் என சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது.