அரசியலமைப்பை காப்பதற்கு நடக்கும் தேர்தல்: அகிலேஷ் யாதவ் பிரசாரம்

பாரபங்கி: உத்தரபிரதேசத்தின் பாரபங்கி தொகுதியில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அகிலேஷ் யாதவ், “நடைபெறும் தேர்தல் அரசியலமைப்பை மாற்ற நினைப்பவர்களுக்கும், அதை காக்க நினைப்பவர்களுக்கும் இடையே நடக்கும் தேர்தல். நாட்டில் உள்ள பிரச்னைகள் பற்றி மக்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். இரட்டை இயந்திர ஆட்சி பற்றி பேசுபவர்களை மக்கள் விட்டு விட மாட்டார்கள்.

ஏழை விவசாயிகளின் நிலங்களை பறித்து பெரிய தொழிலதிபர்களுக்கு தாரை வார்க்கவே விவசாய சட்டங்களை கொண்டு வந்தனர். பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் காவலர்களின் பணிகள் மாற்றப்படும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்காமல், அரசு போட்டி தேர்வு வினாத்தாள்களை கசிய விட்டு, அவர்களை பாஜ ஏமாற்றி உள்ளது. உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், பாஜவும் மறைமுக கூட்டணி வைத்துள்ளன” என்று குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அகிலேஷ் யாதவ், “தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படும். ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி தரம் உயர்த்தப்படும்” என உறுதி அளித்தார்.

The post அரசியலமைப்பை காப்பதற்கு நடக்கும் தேர்தல்: அகிலேஷ் யாதவ் பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: